செய்திகள்
வெளிநாட்டு பனியன் ஆர்டர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு - ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ஏற்றுமதி மற்றும் சார்பு நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளதால் பல லட்சம் தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்வில் திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கடந்த வாரம் 25 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதால் வெளி நாட்டு ஆர்டர்களை முடித்து கொடுப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
தற்போது கூடுதல் தொழிலாளர்களுடன் இயங்குவதன் மூலம் ஆர்டர்களை விரைவாக முடித்து கொடுப்பதுடன் புதிதாக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கின.பனியன் நகரான திருப்பூரில் 25 சதவீத தொழிலாளருடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கி வந்தன.தமிழக அரசு தற்போது திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் 50 சதவீத தொழிலாளருடன் ஏற்றுமதி நிறுவனங்கள், ‘ஜாப்ஒர்க்‘ நிறுவனங்கள் செயல்பட அனுமதித்துள்ளது.
பிற மாவட்டங்களில் 100 சதவீத தொழிலாளருடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.ஏற்றுமதி துறையினர் குறித்த காலத்தில் ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்ய இது உதவியாக இருக்கும். தமிழக ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தயக்கமின்றி ஆர்டர்கள் வழங்கலாம் என்ற புதிய நம்பிக்கை வெளிநாட்டு வர்த்தகர்கள் மத்தியில் பிறந்துள்ளது. திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வரும் நாட்களில் அதிக அளவு ஆர்டர் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.ஏற்றுமதி மற்றும் சார்பு நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளதால் பல லட்சம் தொழிலாளர்களின் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.