இருகூர் பகுதிக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்
நீலாம்பூர்:
கோவை மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. ஊரகப் பகுதியில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. சூலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நேற்று 350 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது,
ஏற்கனவே இருகூர் சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அது நிறுத்தப்பட்டது. மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு தடுப்பூசி போடப்பட்ட சுகாதார நிலையமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இருந்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் இருந்தும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் தினந்தோறும் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக இங்கு வருகின்றனர். தடுப்பூசி போதிய அளவில் இல்லை என சுகாதார நிலையத்தில் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இருகூர் சின்னியம்பாளையம், அத்தப்ப கவுண்டன் புதூர், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இங்குள்ள சுகாதார நிலையங்களில் வழங்க வேண்டும் என சுகாதாரதுறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.