தடுப்பூசி போடுவதில் சென்னை முதலிடம்
சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை 27.23 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தடுப்பூசி போடுவதில் ஒட்டுமொத்த மக்கள் தொகை அடிப்படையில் சென்னை முதல் இடத்தை பிடித்து உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருப்பவர்களை விட சென்னையை சேர்ந்த மக்கள்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
கோவின் இணையதளத்தின் மூலம் கடந்த 17-ந்தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சென்னை நகரம் முதல் இடத்தில் இருக்கிறது.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கடந்த 17-ந் தேதி நிலவரப்படி சென்னையில் 24.4 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தி உள்ளனர். மும்பையில் 17.6 சதவீதம் பேரும், டெல்லியில் 14.4 சதவீதம் பேரும், பெங்களூரில் 3.9 சதவீதம் பேரும் முதல் டோஸ் போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசியின் 2 டோஸ்களை சென்னையில் 7.5 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர். டெல்லியில் 4.6 சதவீதம் பேரும், மும்பையில் 4.2 சதவீதம் பேரும், பெங்களூரில் 0.7 சதவீதம் பேர் 2 டோஸ்களை எடுத்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சென்னையில் 35.1 சதவீதம் பேர் ஒரு டோஸ் செலுத்தி உள்ளனர். 10.8 சதவீதம் பேர் 2 டோசையும் எடுத்துக்கொண்டனர்.