செய்திகள்
பணம் திருட்டு

டாக்டரின் தாயார் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் திருட்டு

Published On 2021-06-18 11:48 GMT   |   Update On 2021-06-18 11:48 GMT
திருச்சி டாக்டரின் தாயார் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயாருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சேமிப்பு கணக்குகள் இருந்தன.

கடந்த 2-ந் தேதி டாக்டரின் தாயார் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வந்தது. இதைக் கண்ட டாக்டர் பாலசுப்பிரமணியன் வங்கி கிளைக்கு சென்று தனது தாயாரின் சேமிப்பு கணக்கில் ஏதேனும் பண பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளதா? என கேட்டார்.

அப்போது அவரது கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெறவில்லை என தெரிவித்தனர். ஆனாலும் சந்தேகமடைந்த அவர் 4 சேமிப்பு கணக்குகளிலும் இருப்புத் தொகையை சரி பார்த்தார்.

அப்போது அவரது வங்கி கணக்குகளில் இருந்து ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 998 ஆன்-லைன் மூலம் நூதனமாக திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் கொடுத்தார். புகார் குறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக ஆன்-லைன் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து நூதனமாக பணத்தை திருடும் கும்பல் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதுகுறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி இந்த தொடர் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News