செய்திகள்
பனியன் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி பணிகள் தீவிரம்
தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வெகுவிரைவில் தொற்று இல்லாத திருப்பூர் உருவாகும்.
திருப்பூர்:
திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
ஊரடங்கால் மே மாதம் முதல் ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டது. இடையில் தளர்வு அளிக்கப்பட்டதால் 7-ந்தேதி முதல் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் தொற்றில்லா திருப்பூரை உருவாக்கி பின்னலாடை துறையை தடையின்றி இயங்க செய்ய இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் துவக்கமாக திருப்பூர்-மங்கலம் ரோடு, சுல்தான்பேட்டையில் உள்ள பிருத்வி இன்னர்வேர்ஸ் நிறுவனத்தில் 500 பேர், பூலுவப்பட்டியில் உள்ள எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 500 பேர் என மொத்தம் ஆயிரம் தொழிலாளருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நல்லூரில் உள்ள டெக்னோ ஸ்போட்ஸ் நிறுவனத்தில் 225 பேர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பி.எஸ்., அப்பேரல்ஸில் 425 பேர் என மொத்தம் 650 தொழிலாளருக்கு ஊசி போடப்பட்டது.
மருத்துவ குழுவினரை நிறுவனங்களுக்கே அழைத்துவந்து தடுப்பூசி போடப்படுகிறது. இத்திட்டம் குறித்து சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன், முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:-
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து தனியார் மருத்துவமனை மூலம் தடுப்பூசி பெற்று திருப்பூரில் பின்னலாடை தொழிலாளருக்கு ஊசிபோடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மொத்தம் 2 லட்சம் தொழிலாளருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக திருப்பூரில் 5 மருத்துவமனைகளுடன் கரம் கோர்த்துள்ளோம்.
ஆடை உற்பத்தி நிறுவனங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தொகை செலுத்தி கொள்முதல் செய்து தொழிலாளருக்கு இலவசமாக ஊசி போடப்படுகிறது.
தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்துவதன்மூலம் வெகுவிரைவில் தொற்று இல்லாத திருப்பூர்உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.