செய்திகள்
கொரோனா உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படவில்லை- ராதாகிருஷ்ணன்
சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு தகவல் வந்தாலும், அதனை சேர்த்து தினசரி கொரோனா உயிரிழப்புகளின் கணக்கில் காட்டப்படுவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருவதாகவும், சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.