செய்திகள்
திருக்கோவிலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து வியாபாரி பலி
திருக்கோவிலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள ஞானம்பெற்றான்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 42). காய்கறி வியாபாரியான இவர் சம்பவத்தன்று காய்கறிகள் வாங்கி வருவதற்காக தனது ஆட்டோவில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார். திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க தண்டபாணி திடீரென பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த தண்டபாணியை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.