நெல்லை, தூத்துக்குடியில் இடியுடன் கனமழை
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நேற்றும் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் பரவலாக மழை பெய்தது.
குளிர்ந்த காற்றும் வீசிய நிலையில் திடீரென பலத்த இடியுடன் மழை பெய்தது.
மாநகர பகுதிகளான பாளை, சமாதானபுரம், வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.
மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மூலக்கரைப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 65 மில்லிமீட்டர் பதிவாகியது.
இந்த மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மாவட்டத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 30 மில்லிமீட்டர் மழையும், பாளையில் 18 மில்லிமீட்டர் மழையும் கொட்டியது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் கார் சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். தொடர்ந்து மழையும் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ஆறாம்பண்ணை, ஸ்ரீவைகுண்டம், நாசரேத், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
நாசரேத்தில் பிரகாசபுரம், மூக்குப்பீறி, மணிநகர், தைலாபுரம், அகப்பை குளம் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தென்காசி மாவட்டத்தில் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
கருப்பாநதி அணை பகுதியில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.