செய்திகள்
தமிழகத்திற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்- மத்திய அரசு
தமிழகத்தில் சுமார் 7.24 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை:
தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் தமிழகத்துக்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜூன் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்திற்கு ஜூன் 2-ந்தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 7.24 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.