செய்திகள்
ஆசிரியர்கள் தவறு செய்தால் பள்ளி நிர்வாகத்தை குறை சொல்வதா? -எல்.முருகன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவறு செய்தால் அதற்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க முடியுமா? என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 'மக்கள் தொண்டு தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோர்க்கு நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைந்தகரையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஒரு ஆசிரியர் தவறு செய்திருக்கிறார். எந்த ஆசிரியராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதும், அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலீசாரும் அவரை கைது செய்திருக்கிறார்கள். இதையும் மீறி அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது குறை சொல்கிறார்கள்.
இதுபோன்று நிறைய பள்ளிகளில் நடந்துள்ளது. அரசுப் பள்ளிகளிலும் தவறு நடந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதற்கு, கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.