செய்திகள்
பாஜக ஆட்சியின் 7 ஆண்டு நிறைவு- சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எல்.முருகன்
தமிழகத்தில் பா.ஜ.கவினர் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 'மக்கள் தொண்டு தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பா.ஜ.கவினர் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும், தடுப்பூசி விழிப்புணர்வு, ரத்ததான முகாம்கள், கொரோனா சிகிச்சை உதவிகள், முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்குவது, ஏழை மக்களுக்கு, உணவு பொருட்கள் வழங்குவது என பலவித சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை பாஜகவினர் வழங்குகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில தலைவர் எல்.முருகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.