செய்திகள்
மு.க.ஸ்டாலின்

அதிர்ச்சி...வேதனை... ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-05-29 14:55 GMT   |   Update On 2021-05-29 14:55 GMT
வேதனையில் வாடும் ஆ.ராசா அவர்களின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராராவின் மனைவி பரமேஸ்வரி  காலமானார். புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

ஆ.ராசாவின் மனைவி மறைவுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர்  ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் பரமேஸ்வரி அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 



திராவிடத் தத்துவத்தினை அரசியல்  பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா அவர்களின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசா அவர்களின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா அவர்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News