செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கில் பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

Published On 2021-05-28 11:01 GMT   |   Update On 2021-05-28 11:01 GMT
இந்த தம்பதி கடந்த ஆண்டு ஊரடங்கு காலம் தொடங்கிய நாள் முதல் இந்நாள்வரை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள டி.கே.சி.நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ்(44). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரெஜினாள்(44).

இவர் தண்டுபத்து- சிதம்பராபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

இந்த தம்பதி கடந்த ஆண்டு ஊரடங்கு காலம் தொடங்கிய நாள் முதல் இந்நாள்வரை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இது குறித்து அந்தோணி ராஜ் கூறுகையில்:-


நானும் எனது மனைவியும் மாற்றுத்திறனாளி. நாங்கள் ஊரடங்கு காலம் தொடங்கிய ஏப்ரல் 2020-ம் மாதம் முதல் உணவின்றி தவிப்பவர்களுக்கு வீட்டிலே சமைத்து கொண்டு போய் கொடுக்கிறோம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 500 நபருக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி காய்கறிகள் பலரது உதவியுடன் மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆதரவற்றோர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளோம்.

அதே போல் கொரோனா 2-வது அலையிலும் ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் மருத்துவ மனை செல்ல இலவச ஆட்டோ வசதி செய்து கொடுக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். கபசுரக் குடிநீர் தேவைப்படும் கிராமங்களுக்கு வழங்கி வருகிறோம்.

சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, பகுதிகளிலும் பசியால் தவிப்பவர்களுக்கு உணவு வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News