செய்திகள்
மணப்பாட்டில் புயலில் சேதமடைந்த கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டபோது எடுத்த படம்.

மணப்பாடு மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2021-05-27 15:27 GMT   |   Update On 2021-05-27 15:27 GMT
கடலில் மாயமான மணப்பாடு மீனவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
குலசேகரன்பட்டினம்:

‘யாஸ்’ புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக கடற்கரையோர கிராமங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை கிராமமான மணப்பாடு கிராமத்தில் மீன் வலைக்கூடம் மற்றும் மணல் குன்றின் மேல் உள்ள சிலுவை கோவில் அருகே பக்தர்கள் அமரும் கட்டிடங்களின் மேற்கூரை பலத்த சேதமடைந்தது.

இதை அறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10.30 மணி அளவில் மணப்பாடு கிராமத்துக்கு சென்று புயல் சேத பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனவர்களின் மீன் வலைக்கூடத்தை உடனே சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிைடயே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மங்களூரில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகு கடலில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பல மீனவர்கள் மாயமானார்கள். இதில் மணப்பாடு டென்சன் (39) என்பவரும் மாயமானர். பல நாட்கள் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவரது வீட்டுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று, டென்சன் மனைவி ராணி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். மேலும் முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்து டென்சன் குடும்பத்துக்கு அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு விபத்தில் பலியான ராகவன் (15) என்பவர் வீட்டுக்குச் சென்று ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சயில் பங்குத்தந்தை லெரின் டிரோஸ், மீன்வளத் துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் ஜெகன், உதவி கலெக்டர் தனப்பிரியா, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News