செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை கருப்பு தினமாக அனுசரிக்கக்கோரி அகில இந்திய போராட்டக்குழு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எனவே வேளாண் திருத்தச்சட்டஙகளை மத்திய அரசு திரும்பப்பெற வேணடும்.கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பனியன் சங்க பொதுக்குழு உறுப்பினர் ராஜன், கிளை தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல ஊத்துக்குளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.