செய்திகள்
கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

இ-பதிவு கட்டாயம்- 8 இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை

Published On 2021-05-19 17:55 GMT   |   Update On 2021-05-19 17:55 GMT
இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் தெரிவித்தார்.
கரூர்:

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது வெளியிடங்களுக்கு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் கரூர் மாவட்ட எல்லையான வாங்கல் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்களை நிறுத்தி எதற்காக வெளியே செல்கிறீர்கள்? என்று விசாரித்ததுடன், இ-பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தார்.

பின்னர், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் 9-வது நாளாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்பவர்கள், உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மற்றும் இ-பதிவு பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், காரணம் எதுவுமின்றி வெளியிடங்களில் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்தவகையில் உரிய காரணங்களின்றி வாகனங்களில் வந்த 130 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணங்களுக்காக ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News