செய்திகள்
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை- முதலமைச்சர் அறிவிப்பு
கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
சென்னை:
பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார்.
கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ரா. ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ரா. பின்னர் எழுத்தாளராக மாறினார்.
தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை மற்றும் நினைவரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும்.
கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். பள்ளியில் அவரது படைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் அரங்கம் நிறுவப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.