செய்திகள்
தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது- தமிழக அரசு

Published On 2021-05-18 08:46 GMT   |   Update On 2021-05-18 09:13 GMT
கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதன்படி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17-ந்தேதி வரை இணையதளம் வழியாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடையாக வந்துள்ளது. 



கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

ரூ.69 கோடியில் கொரோனா சிகிச்சைக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரெயிலில் கொண்டு வரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News