செய்திகள்
வாகனங்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 9,802 பேர் மீது வழக்கு

Published On 2021-05-17 22:44 GMT   |   Update On 2021-05-17 22:44 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 9 ஆயிரத்து 802 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 9 ஆயிரத்து 802 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று 2-வது அலையை தடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறை விதிகளை மீறி முககவசம் அணியாத 9,264 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 538 பேர் என மொத்தம் இதுவரை 9,802 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 139 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்வராயன்மலை உள்பட மாவட்டம் முழுவதும் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொரோனா ஊரடங்கை மீறி மது மற்றும் சாராயம் விற்பனை செய்தல், காய்ச்சியது தொடர்பாக 63 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 1,345 லிட்டர் சாராயம், 190 மது பாட்டில் மற்றும் 17 ஆயிரத்து 80 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தால் வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் முககவசம் அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் மூன்று 3 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடித்து, முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News