ரேஷன் கடை முன்பு ரூ.2 ஆயிரம் வாங்குவதற்காக வட்டத்தில் நாயை நிறுத்தி இடம் பிடித்ததால் பரபரப்பு
மதுரை:
கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
இதையொட்டி மதுரை அவனியாபுரம் ரேஷன் கடை அருகே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணம் வாங்கிச் செல்வதற்கு வசதியாக பணியாளர்கள் வட்டவடிவில் கோடுகளை வரைந்து இருந்தனர்.
இன்று அதிகாலை முதல் பணம் வாங்க இடம் பிடிப்பதற்காக இந்த வட்டங்களில் பொதுமக்கள் பைகள் மற்றும் கற்களை அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ரேஷன் கடை முன்பு இருந்த வட்டத்தில் நாய் ஒன்று வந்து நின்றது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நாயை விரட்ட முயன்றனர் அப்போது ஒருவர் அங்கு வந்து “இது என் நாய், எனக்காக வட்டத்தில் நிற்கிறது” என்று கூறி விட்டு கடையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டார்.
மதுரை மாநகரில் ரேஷன் கடை வட்டத்தில் மனிதனுக்குப் பதிலாக நாய் வந்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.