செய்திகள்
அவினாசி-அத்திக்கடவு குடிநீர் திட்டப்பணிகள் தொய்வு
ஆக்சிஜன்-தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவினாசி-அத்திக்கடவு குடிநீர் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அவிநாசி:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குளம், குட்டைகளில் நீரா தாரத்தை உருவாக்கவும் பாசன மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணியில் உள்ளூர் மற்றும் பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த 1,100 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் ஆக்சிஜன்-தொழிலாளர்கள் பற்றாக் குறையால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறியதாவது:-
தேர்தலில் ஓட்டளிக்க சென்ற மேற்கு வங்க தொழிலாளர்கள் மற்றும் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்கள் என 600 பேர் பணிக்கு திரும்பவில்லை. எஞ்சிய 500 தொழிலாளர்களால் பணி நடந்து வருகிறது.
மருத்துவ ஆக்சிஜன் தேவையால், தொழில்துறைக்கான ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெரிய இரும்பு குழாய் பதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பம்ப் ஹவுஸ்களில் மின்சாரம் தொடர்பான பணிகள் சிறிய குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.