செய்திகள்
கோப்புப்படம்

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட 584 பேருக்கு கொரோனா

Published On 2021-05-12 00:41 GMT   |   Update On 2021-05-12 09:08 GMT
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட 584 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியானார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளராக டாக்டர் கோபாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 330 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 352 ஆக இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட 3,912 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பூரை சேர்ந்த 58 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுபோல் 38 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பூரைச் சேர்ந்த 37 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருப்பூரைச் சேர்ந்த 64 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பூரை சேர்ந்த 38 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News