செய்திகள்
கைதான வனராஜ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காணலாம்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,151 மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-05-11 10:33 GMT   |   Update On 2021-05-11 10:33 GMT
கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, சட்டவிரோத விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடமலைக்குண்டு:

தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள், முன்கூட்டியே தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் குவிந்தனர். இதற்கிடையே சிலர் முழு ஊரடங்கு நாட்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய மொத்தமாக வாங்கினர். இதனை போலீசார் கண்காணித்து, பதுக்கி வைத்திருக்கும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, அதை சட்டவிரோத விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குமணன்தொழுவுக்கு சென்ற போலீசார் ஒவ்வொரு வீடாக சோதனை செய்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் (வயது 38) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெள்ளையன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வனராஜ் (46) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,151 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News