நெல்லை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி மாரியம்மாள்(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள். நல்லசிவம் கார் டிரைவராக உள்ளார். மாரியம்மாள் தோசை மாவு அரைத்து விற்று வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லசிவம் புதிதாக வீடு கட்டினார். அப்போது மாரியம்மாள் கடன் வாங்கி உள்ளார். மேலும் அவர்களது மூத்த மகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்காகவும் மாரியம்மாள் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கணவன்-மனைவி 2 பேருக்கும் வேலை சரியாக இல்லாததால் அவர்களால் வாங்கிய கடன் தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் 2 பேரும் மனவேதனையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியம்மாள் நேற்று அதிகாலை வீட்டின் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.