கோவையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது
கோவை:
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த இவரது கணவர் அயர்ந்து தூங்கி விட்டார். இளம்பெண் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அம்மன்குளம் ராஜீவ் நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்ற வாலிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் அவர் தனது ஆடைகளை களைந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் காலை இளம்பெண் வாலிபரின் வீட்டிற்கு சென்று எதற்காக இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சஞ்சய் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.