தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் ரூ. 80 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 31 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 15 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 66 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 39 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 88 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 103 பேர் மீதும், விளாத்திகுளம் உட் கோட்டத்தில் 50 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட் கோட்டத்தில் 12 பேர் மீதும் என மொத்தம் 404 பேர் மீது ஒரே நாளில் ரூ. 80 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி உட்கோட்டத்தில் பொது இடங்களில் சமூக இடை வெளியை கடைபிடிக்காத ஒருவரிடம் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.