செய்திகள்
குமாரபாளையம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
குமாரபாளையம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்தில் பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே நிறுவனத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி புள்ளியனூரைச் சேர்ந்த பெருமாள் மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவரும் வேலை செய்து வந்தார்.
தற்போது கொரோனா பரவலால் பள்ளி மூடப்பட்டுள்ளதால் சிறுமி வீட்டில் இருந்தார். அப்போது ஹரிகிருஷ்ணனுக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட அவர் நேற்று முன்தினம் சிறுமியை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஹரிகிருஷ்ணனுடன் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.