செய்திகள்
திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை - முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-04-23 12:40 GMT   |   Update On 2021-04-23 12:40 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன ேசாதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வடுவூர்:

கொரோனா ஒரு ஆண்டுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களில் அமர்ந்திருப்பவர்கள் முககவசம் அணிந்து இருக்கிறார்களா? வாகனங்களில் குறிப்பிடப்பட்ட நபர்கள்தான் பயணிக்கிறார்களா? என கண்காணிக்கப்பட்டது.

சோதனையின்போது முக கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா முதல் அலையின்போது காரில் அமர்ந்திருப்பவர்கள் முககவசம் அணியாவிட்டால், அவர்களை முககவசம் அணிய அறிவுறுத்திய போலீசார் தற்போது அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News