செய்திகள்
கொரோனா பரிசோதனை

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-23 10:49 GMT   |   Update On 2021-04-23 10:49 GMT
உளுந்தூர்பேட்டையில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதன்படி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடிக்கடி சோப்பு போட்டு பொதுமக்கள் தங்களது கைகளை கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ் தலைமையில் உளுந்தூர்பேட்டை சுகாதார ஆய்வாளர் ரவி மற்றும் 20-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் உளுந்தூர்பேட்டை கடை வீதியில் முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முககவசம் அணியாமல் வந்த பலர் அ்ங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்களையும் சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களிடம், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது பற்றியும், அதை தடுக்க முககவசம் அணியவேண்டிதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News