செய்திகள்
ஆடுகள் இறந்துள்ளதை படத்தில் காணலாம்.

கீழக்கரை அருகே வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

Published On 2021-04-21 09:23 GMT   |   Update On 2021-04-21 09:23 GMT
தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஆழ்வார் கூட்டத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரசாமி (வயது 39).

இவர் நீண்ட காலமாக ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு சிறிது தூரத்தில் வலை அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவரிடம் 60 செம்மறி ஆடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இவருடைய ஆட்டு மந்தையில் 8 வெறி நாய்கள் புகுந்தது. நாய்களை கண்டதும் ஆடுகள் சிதறி அடித்து ஓடியது.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு சுந்தரசாமி ஓடி வந்தார். இதற்கிடையே செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது. இதில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 10 ஆடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தன.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஆடுகளை வளர்ப்போர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags:    

Similar News