செல்போன் பார்த்துக் கொண்டே மொட்டைமாடியில் நடைபயிற்சி சென்ற பெண் தவறிவிழுந்து பலி
நெல்லை:
பாளை என்.ஜி.ஓ. ‘ஏ’ காலனியை சேர்ந்தவர் விஜய முத்துகுமார். இவர் மதுரையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா விடுமுறை என்பதால் விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
தினசரி விஜயலட்சுமி மொட்டை மாடிக்கு சென்று நடை பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல நேற்றும் விஜயலட்சுமி மொட்டை மாடிக்கு சென்று நடைபயிற்சி செய்தார். அப்போது கையில் செல்போன் வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களை பார்த்துக் கொண்டே நடை பயிற்சி செய்துள்ளார்.
அந்த மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவர் மிகவும் சிறியதாக இருந்தள்ளது. அதன் அருகே வாக்கிங் சென்ற விஜயலட்சுமி திடீரென்று தவறி கீழே விழுந்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.