செய்திகள்
கைது

கே.கே.சாவடி அருகே விவசாயி கொலையில் முதியவர் கைது

Published On 2021-04-20 09:31 GMT   |   Update On 2021-04-20 09:31 GMT
கே.கே.சாவடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செட்டிப்பாளையம்:

கோவை பிச்சனூர் டேம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 77). இவர் விவசாயம் மற்றும் கால்நடைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வாளையாறு அருகே உள்ள அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்திற்கு மாடு மேய்க்கச்சென்றார்.

வெகுநேரமாகியும் கருப்புசாமி வீடு திரும்பாததால் ராமகிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த கட்டிலில் கருப்புசாமி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் கே.கே.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

எந்த தடையங்களும் கிடைக்காத நிலையில் இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராமகிரு‌ஷ்ணன் தோட்டத்தின் அருகே உள்ள மற்றொரு தோட்டத்தில் மாடு மேய்க்க வந்த வரதராஜன்(65) என்பவர் மாடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கருப்புசாமியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் வரதராஜன் வீட்டில் இருந்த அரிவாள் மற்றும் அவர் சட்டையில் இருந்த ரத்த கரை தடயங்களை வைத்து அதை பரிசோதனை செய்த தடயவியல் துறையினர் அது இறந்தவரின் ரத்தம் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வரதராஜனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News