செய்திகள்
கோப்பு படம்.

பாவூர்சத்திரத்தில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

Published On 2021-04-18 09:50 GMT   |   Update On 2021-04-18 09:50 GMT
கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆலங்குளம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் முகேஷ் என்ற ராக்கி(வயது 27). கூலி தொழிலாளி.

இவர் நேற்று அதிகாலை பாவூர் சத்திரம்- குறும்பலாப்பேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் உடலில் ஏராளமான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

போலீசார் முகேசின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முகேசை மேலப்பாவூரை சேர்ந்த ஒரு பெண் வளர்த்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு காரணம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர்தான் என முகேஷ் கூறி வந்துள்ளார். இதனால் முகேசை தீர்த்து கட்ட அந்த நபர் முடிவு செய்துள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபரிடம் ரூ.1 லட்சம் தருவதாகவும், முகேசை கொலை செய்து விடுமாறும் அந்த நபர் கூறி உள்ளார்.

அதன் பேரில் நேற்று அந்த நபர் கூலிப்படையினரை அழைத்து வந்து பணத்திற்காக முகேசை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் கொலை செய்ய தூண்டிய அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கூலிப்படையினரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட முகேசின் உடலை வாங்க மறுத்து பாவூர்சத்திரத்தில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News