செய்திகள்
முககவசம் அணியாத 142 பேரிடம் அபராதம் வசூல்
சாலைகளில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அரசின் உத்தரவின்படி அபராதம் விதித்ததோடு முககவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர்.
ராமநாதபுரம்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதோடு முககவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தர விட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலைகளில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அரசின் உத்தரவின்படி அபராதம் விதித்ததோடு முககவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். இவ்வாறு நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 142 பேரிடம் முககவசம் அணியாததற்காக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.