அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவி காலம் முடிந்தது
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. நேற்று வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வில்லை.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் சூரப்பா இன்று ஓய்வு பெற்றார்.
கடந்த ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பதவிக்காலம் அவர்கள் பணிபுரிந்த கடைசி நாளில் நீட்டிக்கப்பட்டது. ஆனால் சூராப்பாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட வில்லை.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தற்போது துணை வேந்தர் இல்லாததால் நிர்வாகத்தை கவனிக்க கன்வீனர் குழு அமைக்கப்படும். அந்த குழுவும் இன்னும் அமைக்கப்பட வில்லை.
சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சூரப்பா பணி ஓய்வுபெற்று சென்றாலும் விசாரணைக்கு அழைத்தால் கட்டாயமாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.