செய்திகள்
கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.12¾ கோடி மோசடி- திருப்பூர் நிதி நிறுவன அதிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-03-31 12:23 GMT   |   Update On 2021-03-31 12:23 GMT
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.12¾ கோடி மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பூர்:

கோவை வடவள்ளி தக்ஷா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை அனுமதியில்லாமல் நடத்தி வந்தார். மேலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் சீட்டு நடத்துவதாக கூறி திருப்பூர் மாநகரில் உள்ள 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.12.70கோடி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அரவிந்த் சேலத்திலும் வெவ்வேறு பெயர்களில் புதிய நிதி நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் தடை செய்யப்பட்ட பரிசு சீட்டு மற்றும் பணப்பரிமாற்ற திட்டங்கள்(தடை) சட்டத்திற்கு எதிராக பொதுமக்களை மோசடி செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அரவிந்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அரவிந்த் மீது குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News