செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றால் மின்தடை- பொதுமக்கள் அவதி
செங்கோட்டை:
செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியான மேற்குதொடர்ச்சி அடிவார பகுதி புளியரை, புதூர், கற்குடி கண்ணுப்புள்ளிமேடு, செங்கோட்டை, பிரானூர், வல்லம், பண்பொழி, மேக்கரை, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அதிகாலை பனிபொழிவுடனும், நண்பகல் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்தும் காணப்பட்டது. பின்னர் 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு பலத்த காற்று, இடி-மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் தொடர் மழை பெய்தது.
இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.