செய்திகள்
ஜோலார்பேட்டை ஒன்றிய அமமுக நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவு
தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒன்றிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ள சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை ஒன்றிய அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.இளங்கோ மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் கட்சி பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் கடந்த 4 வருடமாக மாவட்டச் செயலாளர் ஆர்,பாலசுப்பிரமணி கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக எந்த ஒரு கிராமத்திற்கும் இதுவரை வந்ததில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன் காரணமாக கட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது ஆனால் கட்சி நிர்வாகிகளுக்காக வாக்கு சேகரிக்கும் பணிக்கு கூட எந்த ஒரு கிராமத்திற்கு இதுவரை வரவில்லை. எனவே ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே தாங்கள் மாவட்டச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.