செய்திகள்
கோப்பு படம்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செங்கல் சூளை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்

Published On 2021-03-27 01:49 GMT   |   Update On 2021-03-27 01:49 GMT
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செங்கல் சூளை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 50). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இவருடன் அந்த செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த அம்பை அருகே உள்ள பாடகபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நல்லமுத்துவிடம் கேட்டபோது தாமதம் செய்து வந்துள்ளார். மீண்டும் அந்த பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு வீட்டிற்கு சென்று கேட்ட போது நல்லமுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லமுத்துவை கைது செய்து அவர் மீது நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட நல்லமுத்துக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்க முத்து ஆஜரானார்.

இந்த வழக்கில் சாட்சிகளை முறைப்படி ஆஜர்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா வழக்கை சிறப்பாக நடத்தியதாக அவரை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.
Tags:    

Similar News