பணம், பரிசு பொருட்கள் குறித்து கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்- கலெக்டர் உத்தரவு
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலும், துணை கலெக்டர் நிலையிலுமான அலுவலர்களின் தலைமையில் பல்வேறு பணிகளை பிரித்து குழுஅமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரிவு அலுவலர்களின் பணிகளை தினசரி அறிக்கையாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களும் விழிப்புடன் பணியாற்றிடவேண்டும். கண்காணிப்புக் குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். முறைகேடாகவும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் கொண்டுசெல்லும் எவ்வித ரொக்கம், பரிசுப்பொருட்கள் மற்றும் இதரபொருட்கள் எதுவானாலும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் பறிமுதல் செய்ய வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தலைமையிடத்தில் தங்கியிருந்து பணியாற்றவேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே, வாகன வசதியுடன் அந்தந்த வட்டாரங்களில் தயார் நிலையில் உள்ளதை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகளை வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.