செய்திகள்
முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள்-பணம் கொள்ளை
முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள்- பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகாசம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை பிரகாசம், தனது மனைவி சசிகலா மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் செயின், 3½ பவுன் நெக்லஸ் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பிரகாசத்தின் மனைவி சசிகலா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.