செய்திகள்
ரமேஷ்

ஓமலூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Published On 2021-03-25 14:35 GMT   |   Update On 2021-03-25 14:35 GMT
ஓமலூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சர்க்கரை செட்டிபட்டி ஊராட்சி நாலு கால் பாலம் புதூர்பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவருடைய மகன் ரமேஷ் என்கிற பெருமாள் (28). திருமணம் ஆகாதவர். இவர் திருமண விழாக்களில் பந்தல் அமைப்பது, லைட் செட்டிங் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை நாலுகால்பாலத்தை அடுத்த தொப்பளான் காட்டுவளவு பகுதியில் திருவிழாவிற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பன்னீர்செல்வம் (55) என்பவர் ரமேஷிடம் எனது கிணற்று பம்பு ரூமில் மோட்டார் ஓடவில்லை. இதனை சரிபார்த்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ் அப்போது வராமல் அருகில் ஒரு இடத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு சுமார் 9 மணியளவில் பன்னீர்செல்வம் கிணறு அருகே சென்று பார்த்போது ரூமில் ரமேஷ் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தியிடம் தகவல் தெரிவிக்கவே கிராம நிர்வாக அலுவலர் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரமேஷ் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News