செய்திகள்
தற்கொலை

திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2021-03-25 11:00 GMT   |   Update On 2021-03-25 11:00 GMT
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி தென்னூர் காவல்காரன்தெருவை சேர்ந்தவர் சரளா. இவருடைய மகள் அனிதா (வயது 26). இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு புருஷோத்தமன் என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவை சேர்ந்த அனுஜ்குமாரை அனிதா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அனிதா சென்னையில் கணவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அனிதாவின் தம்பி அர்ஜூன் சென்னைக்கு சென்று திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கடந்த 16-ந் தேதி அக்காவை திருச்சிக்கு அழைத்து வந்தார். திருவிழா முடிந்ததையொட்டி கடந்த 18-ந் தேதி அனிதா தனது கணவருக்கு போன் செய்து திருச்சிக்கு வந்து அழைத்து செல்லும்படி கூறினார்.

அப்போது அவர் 4 நாட்களுக்கு பிறகு திருச்சி வருவதாக கூறியதாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அனிதா எலிமருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனிதாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News