செய்திகள்
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2021-03-16 12:54 GMT   |   Update On 2021-03-16 12:54 GMT
உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது.

குறிப்பாக உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்துக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக வளையப்பட்டி கிராமத்தில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

ஒரு குடம் தண்ணீர் எடுக்க பல மைல் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினை குறித்து பல முறை அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் இன்று காலை உசிலம்பட்டி பேரையூர் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வருவாய் அலுவலர் சுந்தரப் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலை பெண்கள் கைவிட்டனர்.



Tags:    

Similar News