செய்திகள்
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கந்திலியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணமாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நடை பயணமாக புறப்பட்டனர். இதில் ஒன்றிய தலைவர்கள் சண்முகம், ஜாவித், பழனி, சங்கர் மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இ.பரத் தலைமை வகித்தார். கொத்தூர் மகேஷ் வரவேற்றார், இதனை மாவட்டத் தலைவர் ச.பிரபு, தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் வேளான் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
கெஜல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.