செய்திகள்
கைது

தொப்பூர் அருகே குப்பை தேங்கியதில் தகராறு: வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய பெண் உள்பட 9 பேர் கைது

Published On 2021-02-19 04:29 GMT   |   Update On 2021-02-19 04:29 GMT
தொப்பூர் அருகே வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய பெண் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட உம்மியம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் மணி (வயது 45) என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். மணி வீட்டருகே, அதே ஊரைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரும் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் மணி புதிதாக கட்டி வரும் கட்டுமான குப்பை கழிவுகள், நரசிம்மனின் வீட்டருகே தேங்கியதாக கூறி, அதனை அகற்றுவது தொடர்பாக மணியின் மனைவி சத்தியவாணி, நரசிம்மனின் மனைவி ராதா ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு ஏற்பட்ட பிறகு நேற்று மணி வீட்டில் 9 பேர் கொண்ட கும்பல் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து மணி தொப்பூர் போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், மணி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்ன மொரப்பம்பட்டியைச் சேர்ந்த ஜெகதீசன் (21), சரண் (20), அரவிந்த் (23), ஆனந்த (24), அசோக் (23), முகில்ராஜ் (28), ராதா (40) உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News