செய்திகள்
தக்கலை அருகே சிறுமியை வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை- அதிகாரிகள் விசாரணை
13 வயது சிறுமியை திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தியதாக உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து அவர்கள் குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 16 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது குடும்பம் வறுமையில் வாடி வந்தது. இந்தநிலையில், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 13 வயது சிறுமிக்கு திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார். பின்னர், ஒரு மாதத்திற்கு பின்பு சிறுமியை ஊருக்கு அழைத்து வந்தார்.
ஊர் திரும்பிய சிறுமி வேலைக்கு அழைத்து சென்ற இடத்தில் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக உறவினர்களிடம் கூறி அழுதார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்ற பெண் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அழைத்து செல்ல கூறினர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.