செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி கோகிலா (வயது 34). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த அக்டோபர் மாதம் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். அதற்கு தேவையான ஆவணங்களையும் வங்கியில் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோகிலாவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே கடந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். பயிர்க்கடன் வழங்காததால் மனவேதனையில் இருந்த கோகிலா நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.
அங்கு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.