செய்திகள்
பழனி அருகே மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டு யானை
பழனி அருகே மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பழனி:
பழனி வனச்சரகத்தில் யானை, மான், சிறுத்தை, அணில் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, கோடைகாலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. அதிலும் யானைகளே மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. எனினும் அவை அவ்வப்போது குடியிருப்பு, தோட்ட பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வந்து செல்கிறது.
இந்தநிலையில் பழனி அருகே தேக்கந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தோட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக கொடைக்கானல் மலைப்பாதையில் இரவு நேரங்களில் காட்டு யானை உலா வருவதாகவும் பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள கொடைக்கானல் மலைப்பாதையில் சுற்றித்திரியும் காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலைப்பாதையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். யானை நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.