செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சிங் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு

Published On 2021-02-04 02:14 GMT   |   Update On 2021-02-04 02:14 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சிங் மாணவிகள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 16-ந் தேதி முதல்  நடந்து வருகிறது. அதன்படி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இவர்களில், தடுப்பூசி போட்டு கொண்ட 19 வயதுடைய 2 நர்சிங் மாணவிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள்அருகில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அறையில் அமரவைக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறுகையில், "கொரோனா தடுப்பூசியை விருப்பம் உள்ள மாணவிகள் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நர்சிங் மாணவிகள் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 மாணவிகள் மிகவும் பதற்றம் அடைந்தனர். இதனால், அவர்களை தனியாக அமரவைத்து ஓய்வு அளிக்கப்பட்டது. ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை" என்றார்.
Tags:    

Similar News